உணவக வாசலில்
கொளுத்தும் வெயிலில் அமர்ந்து
போவோர் வருவோரையெல்லாம்
ஏக்கமாய் பார்த்தபடி
கையேந்தும் கிழவியின்
விழியோர சுருக்கங்களில்
சிக்கித் தவிக்கிறது ஒரு துளி நம்பிக்கை...

ஒற்றை நாணயத்தை

உள்ளங்கையில் வைத்து
அழுத்தினேன்,

என் ஸ்பரிசமும்...
நாணயத்தின்  சிலிர்ப்பும் பட்டு,
அந்த ஒற்றை துளி சமுத்திரமானது...

விரிந்த புருவமும்,
வெடித்த உதட்டிலிருந்து

வெளிவந்த புன்னகையும்,
ஓராயிரம் நன்றிகளை
என் மீது வீசி போயின...

"ஒற்றை ரூபாய் தானே சார்...
சில்லறை இருந்தால்

தராமலா போய் விடுவேன்..." என்று
சில்லறை வைத்துக்கொண்டே

வாதாடிய அந்த  நடத்துனருக்கு...
எப்படி புரியவைப்பேன்...

இன்று நான் கண்ட
ஒற்றை ரூபாய் மகத்துவத்தை...

No comments:

Post a Comment