கண்ணீரில் கரிக்கும் கடல்

சுனாமியே...!
உயிர் குடிக்கும் எமனின்
பினாமியே...!

இத்தனை உயிர்களை
உருட்டிப் போட்டு
பகடை ஆடிய உன்னை...

அன்னை என்பதா...
அரக்கி என்பதா...?

நீ என்ன
அலைகடலா?
இல்லை...
கொலைகடலா?

ஊரே உன்னைத் தேடி வரும்
காற்று வாங்க...
நீ ஊர் தேடி வந்தாயே
காவு வாங்க...

நாங்கள் முன்னேற போட்ட
மனுக்கள் எல்லாம்
தண்ணீரின் எழுத்தாகி போனபோது,
நீ தண்ணீரால் எழுதி போனாயே
எங்கள் தலையெழுத்தை...!

பஞ்சத்தில் வாடிய
எங்கள் ஊர்களுக்கு
காவிரியை தானே வரச்சொன்னோம்
வந்ததே வீடுவரை வங்கக்கடல்...!

உன் பூகம்ப அலைகள்
புரட்டிப்போட்டதில்
அடித்தளமே மேல்தளமாய்
கவிழ்ந்து கிடக்கும் வீடுகள்...

உள்ளே மீட்கவும் முடியாமல்
இறந்து கிடக்கும்,
உயிர்களின் கூடுகள்...

கேவலம்
இத்தனை உயிர்களின்
இறப்பில்லா படைப்பது
இமாலய சாதனை...?

தண்ணீரே...!
உனக்கென்ன அப்படி
தாங்க முடியாத தாகம்...?
இப்படியா அள்ளிக் கொடுப்பது
இத்தனை உயிர்களை...?

எங்கள் வலைகளை கிழித்து போடவும்...
படகுகளை புரட்டிப் போடவும்...
எத்தனை மீன்களுடன் செய்துகொண்டாய்
ரகசிய ஒப்பந்தம்...?

நாங்கள் கடல் தாண்டி செல்ல
விசா வேண்டும்...
நீ எங்கு விசா வாங்கி
எங்கள் வீடுகளுக்கு வந்தாய்
உன் கரை தாண்டி...?

அழையா விருந்தாளியாய் நீ
அத்துமீறி நுழைந்ததில்...
தண்ணீரே துவைத்து பிழிந்து
காய போட சடலங்கள்
எங்கள் கரையோர கிராமங்களில்
கணக்கின்றி காணலாம்

சாவு கணக்கை
சேகரிக்க வந்தவர்களே...!
பிணங்களை எண்ணிவிடலாம்
நடைபிணங்களை
எந்த கணக்கில் எழுதி வைப்பீர்கள்...?

உயிர்களைவிட
உடல்களே இங்கு
அதிகம் இருப்பதால்...

மிச்சம் இருப்பவர்களை எண்ணுங்கள்...
சீக்கிரம் முடிந்து விடும்
உங்கள் வேலை...!
தயாரித்த அறிக்கையின்
தலைப்பில் எழுதுங்கள்
"இது கண்ணீரில் கரிக்கும் கடல்" என்று
அதிகாலை தூக்கத்தை
அனுபவிக்க வேண்டுமா?
நான்கு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்து
எழுந்த இடத்திலிருந்து
மீண்டும் துவங்கு
உன் தூக்கத்தை...

அப்போதுதான்
இடுப்பிலும்
கழுத்திலும்
கைவிரல் இடையிலும்
விடுபடும் சோம்பலை
விழிப்பில் காண்பாய்...

முதுகுத்தண்டு
மொத்தமாய்  தரை அழுத்த...
கால்களை நீட்டி
கைகளை தளர்த்தி
பாதி கண் திறந்து
விழிப்பில் உணர்வாய்
மயக்கத்தை...

வலப்பக்கம்
இடப்பக்கம் என
மாறி மாறி படுத்து...
குளிருக்கு ஒடுங்கும் கோழியாய்
உடல் சுருக்கி...
போர்வைக்குள்
மொத்தமாய் புகுந்து கொண்டு...
விலகிப்போன தலையணையை
கழுத்துக்குள் சிறைப்பிடித்து...

கண்களுக்கு வெளியே
காத்திருக்கும் உறக்கத்தை
இமைகளின் வழியே
மூளைக்கு அனுப்பி
மூளையின் விளக்கணைத்து
எண்ணத்தின் கதவடைத்து
மீண்டும் நித்திரையின்
வாசலுக்கு வருவதுதான்
எத்தனை பரவசம்...

சற்று நேரத்தில்
துவங்கிவிடும் சத்தங்கள்...
உன் நித்திரைக்கு சவாலாய்
விதம்விதமாய் தொல்லைகள்...
கட்டுக்கட்டாய் கடமைகள்...

நீ எழுந்து விட்டால் போதும்...
தூங்குவது போல்
நடித்துக் கொண்டிருக்கும்
தொல்லைகள் எல்லாம்
தொடர்ந்து வந்து
தொற்றிக் கொள்ளும்...

உன்னால்
உனக்காக
தனிமையில்
அனுபவிக்க கிடைத்தது
அதிகாலை தூக்கம் மட்டும்தான்...

அதிகாலை தூக்கத்தை
அனுபவிக்க வேண்டுமா...?
கலைத்துவிடு  உன்
இரவு தூக்கத்தை...!
முற்களாய் பிறந்தேன்
நீ ரோஜாவாய் மலர்வதற்கு...

கற்களாய் கிடந்தேன்
நீ சிலையாய் வருவதற்கு...

சகதியாய் இருந்தேன்
நீ தாமரையாய் பூப்பதற்கு...

இரவாய் விரிந்தேன்
நீ நிலவாய்  உதிப்பதற்கு...

இத்தனை கனவுகளோடு
பூமியாய் நான் பொறுத்திருக்க
நீ அதில் பூகம்பமாய்
ஏன் வந்து போனாய்...?! 
அந்த சிகப்பு கலர் பெட்டி
பார்க்கும் போதெல்லாம் என்னை
கால் சட்டை வயதுக்கு
கடத்திப் போகும்

"ஸ்கூலுக்கு போறப்போ
போஸ்ட் பண்ணிட்டு போடா" என்று
அம்மா கொடுத்த
எத்தனையோ கடிதங்களை
எக்கியபடி போட்டிருக்கிறேன்
அந்த ஆலமரத்தின் தபால் பெட்டியில்...

பத்தடி நகர்ந்த பின்
சந்தேகம் வரும்...

உள்ளே விழுந்ததா, இல்லை...
தொண்டையில் சிக்கிய முள் போல
கம்பியில் சிக்கியபடி
பாதியில் தொங்குமா, என்று...

மீண்டும் வந்து...
சற்று உயரமான கல் நகர்த்தி போட்டு
உள்ளே கைவிட்டு
தொங்கும் கம்பிகளை ஆட்டிவிட்டு
கடிதம் உள்ளே விழும்,
'டொப்'  கேட்டபின் தான்
நகர்ந்து போவேன் நிம்மதியாய்...
ஜன்னலுக்கு உள்ளே,
தொலைக்காட்சி 'தொடர் மழையில்'
மனிதர்கள் நனைந்து கொண்டிருக்க...

ஜன்னலுக்கு வெளியே
யாராலும் கவனிக்கப்படாமல்

பெய்துகொண்டிருக்கிறது  தொடர்மழை...

மின்னல் வெட்டாய்
வெளிச்சத்தை அனுப்பி
கவனத்தை ஈர்க்கிறது மழை...

அப்படியும் யாரும்
கவனிக்காமல் போகவே...!
கோபம் கொண்ட மழை,
இடியாய் இறங்கி
தொலைக்காட்சி பெட்டியை

துளைத்துச் சென்றது...

எல்லோரும் இப்போது 
வாசலுக்கு வந்தார்கள்,
மழையை ரசிப்பதற்காக அல்ல...

தொடரை அடுத்த
தூவானத்தை...
திட்டித்தீர்பதற்காக...!
உணவக வாசலில்
கொளுத்தும் வெயிலில் அமர்ந்து
போவோர் வருவோரையெல்லாம்
ஏக்கமாய் பார்த்தபடி
கையேந்தும் கிழவியின்
விழியோர சுருக்கங்களில்
சிக்கித் தவிக்கிறது ஒரு துளி நம்பிக்கை...

ஒற்றை நாணயத்தை

உள்ளங்கையில் வைத்து
அழுத்தினேன்,

என் ஸ்பரிசமும்...
நாணயத்தின்  சிலிர்ப்பும் பட்டு,
அந்த ஒற்றை துளி சமுத்திரமானது...

விரிந்த புருவமும்,
வெடித்த உதட்டிலிருந்து

வெளிவந்த புன்னகையும்,
ஓராயிரம் நன்றிகளை
என் மீது வீசி போயின...

"ஒற்றை ரூபாய் தானே சார்...
சில்லறை இருந்தால்

தராமலா போய் விடுவேன்..." என்று
சில்லறை வைத்துக்கொண்டே

வாதாடிய அந்த  நடத்துனருக்கு...
எப்படி புரியவைப்பேன்...

இன்று நான் கண்ட
ஒற்றை ரூபாய் மகத்துவத்தை...
கடற்கரைக்கு அழைத்தேன்
என் காதலியை...
அவள் சொன்னாள்
கடற்கரை இப்போதெல்லாம்
கள்ளக்காதலர்களால் கெட்டுவிட்டது என்று...
அதனால் தான் உன்னை அழைக்கிறேன்
நம்மை பார்த்தாவது கடற்கரை
ஆறுதல் அடையட்டும் என்று...!
ரோஜா தோட்டத்துக்கு
முள்வேலி
இரும்புக்கம்பிகளோடு
எதிர்வீட்டு ஜன்னல்
மார்கழியில் நீ போடும்
வண்ண வண்ண கோலங்களை
உன் அம்மாவிற்கு
சொல்லிக் கொடுத்து விடாதே
பிறகு என்
காலைநேர கவிதை
காணாமல் போய்விடும்
அவள் ஏறி நின்றதும்
தன் மொத்த எடையையும் இழந்து
காற்றில் மிதந்தது எடை காட்டும் கருவி...!
அம்மா அழைத்தது
காதில் விழவில்லை
தெருக்கோடியில்
கொலுசு சத்தம்
சென்ற வருடம்
சிறப்பாய் சென்றது
காதலர் தினம்...

இந்த முறையும் கொண்டாடினோம்

நான் கண்ணீரோடு
அவள் கணவனோடு
ஜாதகம் பார்த்து
ஆட்கள் அனுப்பி விசாரித்து
எல்லாம் பொருந்தி வர
சவரன் சீர்வரிசை
திருமணச் செலவு என
சம்பிரதாய பேச்சுக்களும்
சாதகமாக அமைந்து விட
கூரை புடவை
கூடைகூடையாய் பலகாரம்
பார்த்து பார்த்து
சேர்த்து வைத்த பாத்திரங்கள்
சொல்லி சொல்லி
தொடுத்து வாங்கிய நிறைமாலை - என்று
மாமன் சீர் கொண்டு வர
அடுக்கடுக்காய் நகை போட்டு
அக்கா அழகு செய்ய
தோழிகளின் தொல்லைகளால்
வெட்கம் அழுத்தி நான் தலைசாய
சிரிப்பொலியும் சப்தங்களும் நிறைந்த
மணமேடையில் கெட்டிமேள ஓசையில்
நான் கண்விழித்தேன்...
கொட்டியது மேளமல்ல...
தட்டியது கதவு...

அடுத்து ஒரு கோவலன் வந்தான்
தன் ஆண்மையை உறுதி செய்ய
இப்படியாய் கூறைப்புடவை கனவுகளோடு
வீட்டின் கூரையை புடவையாய்...
கழிந்த இரவுகளே அதிகம் என்பதால்
சாந்தி முகூர்த்தம் எனக்கு சலித்து போனது
ஆனால்...
எனக்கும் உண்டு
கல்யாண கனவு

என்னை தேடி
ஆண் பிள்ளைகள் அதிகம் வருகிறார்கள்
ஆனால் மாப்பிள்ளை யாரோ...
இசை
இமயத்தை குனிந்து பார்க்கும்
உயரத்தில் இசை
இறைவனுக்கு மிக மிக
பக்கத்தில் இசை

முறுக்கேறிய மூங்கிலையும்
மென்மையாக்கும் குழலோசை
ஆச்சா மரங்களையும்
ஆலாபனை செய்ய வைக்கும்
நாத இசை

இது
தேவர்கள் பேசும் மொழி
தெய்வங்களுக்கும்
தெரிந்த மொழி
பாமரனும் ரசிக்கும் மொழி
பாடல்களில் வசிக்கும் மொழி 

விடியலுக்கு பூபாலம்...
தளர்வாகவும் போது தாலாட்டு
மகிழ்வாய் என்றென்றும் கல்யாணி
முடியும் நேரம்  முராரி...

செவிகளுக்கு மட்டும்
கேட்பது சத்தம்
செவியையும் தாண்டி
சேர்வதே சந்தம்

உயிருக்கும் உணர்வுக்கும்
உருவான பந்தம்
இசை
இன்றைக்கும் என்றைக்கும்
இறைவனுக்கே சொந்தம்

தோலையும் மரத்தையும் வாத்தியமாக்கி
சந்தங்களை அதற்கும் சாத்தியமாக்கும்
இசைக்கு இன்று பிறந்தநாள்...
இன்னிசை கீதங்கள் பல
இசைக்க பிறந்தநாள்
பேருந்தினுள்
புகைபிடிக்கக்கூடாதென்று...
அப்போதுதான் சுருட்டு ஒன்றை
சுகமாய் இழுத்த
பெரியவரை இறக்கிவிட்டு
பெருமிதமாய் புறப்பட்டது...
எதிரே...
தீவட்டிகளுடன் ஓர் கூட்டம்...
கட்சித் தலைவன் கைதாம்...
சற்று நேரத்தில்
வழியில் இறக்கி விட்ட
கிழவன் தட்டிய
சுருட்டுச்சாம்பலாய் பேருந்து...